பொறுப்பேற்றுக் கொண்ட கட்சியானது, தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியது சட்டமன்றத்தில் தானே தவிர, ஆளுநர் மாளிகையில் இல்லை என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
தவெக உடன் கூட்டணி வைத்த விவகாரத்தில், தமிழக மக்களுக்கு துரோகம் இழைக்கப்படுவதாக கூறுவதை ஏற்க முடியாது என காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவில், தவேக 108 தொகுதிகளைக் கைப்பற்றி, வெற்றி பெற்றுள்ளது. ஆனால், ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை தவேக பெறவில்லை என்பதால், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. இதனால், திமுக உடனான 10 ஆண்டு கால கூட்டணி பந்தம் முறிந்துள்ளது. அரசியல் வட்டாரத்தில் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிந்தைய அரசியல் சூழலில், தவேகவிற்கு காங்கிரஸ் ஆதரவு அளிப்பது குறித்து முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு, சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் ராஜேஷ்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மதச்சார்பற்ற தன்மையை காக்கவே ஆதரவு
அதில், “தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு உருவான அரசியல் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தை காங்கிரஸ் ஆதரிப்பது குறித்து சில விமர்சனங்கள் திட்டமிட்டு முன்வைக்கப்படுகின்றன.
தேர்தல் அறிவிப்புக்கு முன்பே பல்வேறு அரசியல் அழைப்புகள் எங்களுக்கு வந்ததை நாடறியும். இருப்பினும், மதவாத சக்திகளுக்கு எதிராக 'இந்தியா' கூட்டணியில் பயணிப்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். கடந்த சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற காங்கிரஸ் தொண்டர்கள் களத்தில் கடுமையாக உழைத்தனர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஜனநாயக நாட்டில் மக்களின் எண்ண ஓட்டம் சில நேரங்களில் எதிர்பாராத தேர்தல் முடிவுகள். அந்த வகையில், தமிழக மக்களின் தற்போதைய மனநிலை மற்றும் ஜனநாயக முடிவுகளுக்கு தலைவணங்கி, மாநிலத்தின் எதிர்கால நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளோம்.
தவெக-வின் கொள்கை பிரகடனமும், காங்கிரஸின் ஆதரவும்
தவெக தன்னை ஒரு மதச்சார்பற்ற கட்சியாகவே முன்னிறுத்திச் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, அக்கட்சியின் தலைவர் விஜய், பெருந்தலைவர் காமராஜரை தனது கொள்கை வழியில் சமூக தலைவராக ஏற்று, அவர் காட்டிய நீதிக்காகத் தொடர்ச்சியாகப் பயணிப்போம் என்கிற கொள்கையை பிரகடனப்படுத்தியுள்ளார்.
காமராஜரின் லட்சியங்களை உள்வாங்கி, சமூகநீதிப் பாதையில் பயணிப்பதாக அறிவித்துள்ள ஒரு இயக்கத்தை ஆதரிப்பது, தமிழகத்தில் மதச்சார்பற்ற விழுமியங்களை வலுப்படுத்தும் என்று காங்கிரஸ் நம்புகிறது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் மதவாத சக்திகள் தமிழகத்திற்குள் எந்தக் காலத்திலும் காலூன்றி விடக்கூடாது என்பதில் காங்கிரஸ் சமரசமற்ற உறுதியைக் கொண்டுள்ளது.
மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும், தமிழகத்தில் ஒரு வலிமையான மதச்சார்பற்ற ஆட்சி அமைய வேண்டும் என்பதே எங்களின் ஒரே நோக்கம். இதில் தமிழக மக்களுக்கு துரோகம் இழைக்கப்படுவதாகக் கூறுவது அடிப்படை ஆதாரமற்றது.
தமிழக மக்களின் நலனையும், மாநிலத்தின் அமைதியையும் கருத்தில் கொண்டு, மதவாத சக்திகளை தனிமைப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். இத்தகைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டே இந்த ஆதரவு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி என்றும் மதவாதத்திற்கு எதிராகவும், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு ஆதரவாகவும், சமூக நீதியைக் காக்கவும் தனது பயணத்தைத் தொடரும்” என தெரிவித்துள்ளார்.
அதே போல, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை அவரது எக்ஸ் பக்கத்தில், “கடந்த காலங்களைப் போலவே, தமிழ்நாட்டில் மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு, ஆளுநர்களை வைத்து அரசியல் நடத்தும் ஒன்றிய பாஜக அரசு தற்போது இடையூறு செய்து வருகிறது.
பொறுப்பேற்றுக் கொண்ட கட்சியானது, தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியது சட்டமன்றத்தில் தானே தவிர, ஆளுநர் மாளிகையில் இல்லை. எனவே, உடனடியாக ஆளுநர் விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

0 Comments