சாலை, ஆறு போன்ற பகுதிகளின் அருகே செல்லக்கூடாது என தினமும் தனது தந்தை திட்டுவதாகவும், அடிப்பதாகவும், தந்தையை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும், போலீஸ் ஸ்டேஷனில் 5 வயது சிறுவன் புகாரளிக்க வந்த சம்பவம் நடந்தேறியுள்ளது.
முந்தைய தலைமுறை பெற்றோர்களில் பலர் குழந்தைகள் சேட்டை செய்தால், விரட்டி விரட்டி வெளுத்தனர். குழந்தைகளும் பெற்றோர் அடிப்பார்களோ என பயந்து நடுங்கினர்.
இதெல்லாம் 90ஸ் கிட்ஸ்களின் நினைவுகளில் என்றும் நிலையானவை. ஆனால் மத்திய பிரதேசத்தை சேர்ந்த 5 வயது சிறுவன், பல அடி முன்னேறி, அடிக்கும் பெற்றோருக்கு எதிராகவே போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றுள்ள சுவாரஸ்யமான சம்பவம் நடந்தேறியுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள பாக்கனேர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த 5 வயது சிறுவன், தன் அப்பாவுக்கு எதிராக புகாரளிக்க வந்ததாக கூறியுள்ளான். இதனை கேட்ட போலீசார் ஆச்சரியத்துடன், என்ன மாதிரியான புகார் என விசாரித்தனர்.
அதில், சாலை அருகே செல்லக்கூடாது, ஆற்றுக்கு அருகே செல்லக்கூடாது என தினமும் தன் தந்தை திட்டுவதாகவும், அதற்காக அடிப்பதாகவும், அவரை கைது செய்து சிறையில் அடையுங்கள் என்றும் கோபமாக கூறுகிறான்.
அச்சிறுவனின் பேச்சை முழுமையாக கேட்ட போலீசார், தந்தை அக்பால் மீது நடவடிக்கை எடுக்கிறோம் என உறுதியளித்து சிறுவனை அனுப்பி வைக்கின்றனர்.
அவன் புகார் அளிக்க வந்தபோது, அவரது தந்தை ஊரில் இல்லை என்றும், இதுப்பற்றி அவரிடம் விசாரித்ததில் சாலை, ஆறு போன்ற பகுதிகளுக்கு செல்லக்கூடாது என தனது குழந்தைக்கு வலியுறுத்தியதாக கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
0 Comments