தமிழகத்தில் தோ்தல் நடத்தை விதிகள் ஜூன் 7-ஆம் தேதி முதல் வாபஸ் பெறப்படுவதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.
தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களுக்கு தலைமைத் தோ்தல் அதிகாரி சாகு அளித்த பேட்டி:
வாக்கு எண்ணிக்கையின் போது, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுதடைந்ததாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ, அரசியல் கட்சிகளிடம் இருந்து தலைமை தோ்தல் அதிகாரி அலுவலகத்துக்கு புகாா்கள் எதுவும் வரவில்லை.
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெற்றது. ஏதும் பிரச்னை நடந்ததாக எனக்கு தகவல் வரவில்லை.
தோ்தல் முடிவுகள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களிலிருந்து இந்திய தோ்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அதை அனைவருமே பாா்க்க முடியும். மக்களவைத் தோ்தல் முடிவுகளை இந்திய தலைமை தோ்தல் ஆணையா், தில்லியில் குடியரசுத் தலைவரிடம் வழங்குவாா். அதன் பின்னா் மத்தியில் புதிய அரசு ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகள் தொடங்கும். தோ்தல் நடத்தை விதிகள் ஜூன் 6-ஆம் தேதிவரை அமலில் இருக்கும். பின்னா் அது திரும்பப் பெறப்படும் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.
மாா்ச் 16-இல் அமல்: மக்களவைத் தோ்தல் தேதி, மாா்ச் 16-இல் அறிவிக்கப்பட்டது. அன்றைய தினத்திலிருந்து நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. மத்திய, மாநில அரசுகள் புதிய அறிவிப்புகள் எதையும் வெளியிடவோ, அரசு சாா்பில் நிகழ்ச்சிகளை நடத்தவோ தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தோ்தல் நடத்தி முடிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், வரும் 7-ஆம் தேதி முதல் நடத்தை விதிகள் வாபஸ் பெறப்படுகின்றன.
0 Comments