மூலப்பொருள், மின்சார கட்டணம் உயர்வு காரணமாக 20 லிட்டர் குடிநீர் கேன் மற்றும் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர் சங்கத்தினர் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போதும், குடிநீர் உற்பத்தியாளர் சங்கத்தின் மாநில தலைவர் இலங்கேஸ்வரன் கூறுகையில், "கடந்த 20 ஆண்டுகளாக அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியில் எந்த ஒரு விலையையும் நாங்கள் ஏற்றவில்லை. தற்போது உள்ள சூழ்நிலையில் மூலப்பொருட்களின் விலை 40% உயர்ந்துள்ளது. அதேபோல் மின்சார கட்டணம் உயர்ந்துள்ளது. ஆனால் இத்தனை ஆண்டுகள் நாங்கள் தாக்குப் பிடித்து மக்களுக்காக வியாபாரத்தை நடத்தி வந்தோம்.
தற்போது உள்ள இக்கட்டான சூழ்நிலையில் அதனை கடைப்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் 20 லிட்டர் குடிநீர் கேன் விலையை ரூ.5-ம், ஒரு லிட்டர் வாட்டர் பாட்டிலின் விலை ரூ.3 உயர்த்தவும் முடிவு செய்துள்ளோம். மினரல் வாட்டர் தண்ணீரை உற்பத்தி செய்து அதனை பல இடங்களுக்கு டெலிவரி செய்வதற்கு எடுத்து செல்கிறோம். இதற்காக போக்குவரத்து செலவு அதிகமாக உள்ளது. இதை வைத்து தான் நாங்கள் விலை நிர்ணயம் செய்கின்றோம். அம்மா குடிநீர் வாட்டர் பாட்டில் மற்றும் ரயில்வே குடிநீர் வாட்டர் பாட்டில்கள் அவர்களின் போக்குவரத்துகளிலே எடுத்துச் செல்கின்றனர். இதனால் அவர்கள் குறைந்த விலையில் கொடுக்கின்றனர்.
ஆனால் நாங்கள் ஒரு நிறுவனத்திலிருந்து வாட்டர் பாட்டில்களை எடுத்து வந்து அனைத்து இடங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும். இதனால், எங்களுக்கு போக்குவரத்து செலவு அதிகமாக உள்ளது. தமிழ்நாடு முழுவதும் அடைக்கப்பட்ட குடிநீர் நிறுவனங்கள் 1840 நிறுவனங்கள் உள்ளது. போர் பதற்றத்திற்கும் இந்த விலை உயர்வுக்கும் எந்த காரணமும் இல்லை. மூலப் பொருட்களின் விலைவாசி உயர்வால் நாங்கள் இந்த விலை உயர்வை உயர்த்த முடிவெடுத்துள்ளோம்.
அதேபோல் மின்சார கட்டணம் உயர்வு, தொழிலாளர்கள் சம்பள உயர்வு, அதே போல் தண்ணீர் சோதனை செய்வது உள்ளிட்ட பல்வேறு செலவினங்களை அடிப்படையாக வைத்து தான் இந்த விலை உயர்வு தொடர்பான முடிவு எடுத்துள்ளோம். குடிநீர் ஒவ்வொரு இடத்திற்கு தகுந்தாற்போல் விலை மாற்றம் அடையும். நல்ல தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் சூழ்நிலையில் தான் நாங்களும் உள்ளோம். அதனை மக்கள் பயன்பாட்டுக்காக குடிக்க உகந்த தண்ணீராக மாற்றி தயார் செய்து கொடுப்பதால் விலை ஏற்றதற்கு காரணமாக உள்ளது.
ஏற்கனவே பல முன்னணி நிறுவனங்கள் வாட்டர் பாட்டில்களின் விலைகளை உயர்த்தி விற்பனை செய்து வருகிறது. நாங்கள் அதைவிட குறைவான விலையில் தான் விற்பனை செய்து வருகிறோம்" என்றார்.

0 Comments