காய்கறிகள் எப்போதும் பிரஷ்ஷா இருக்கணுமா? இப்படி வச்சா நீண்ட நாட்களுக்கு வாடாமல் இருக்கும்!
எதை எப்படி வைக்க வேண்டும் என்று தெரியாததால் தான் பெரும்பாலான வீடுகளில் காய்கறிகள் பாதி பயன்படுத்தப்பட்டு பாதி குப்பைக்கு போகின்றன. குறிப்பாக வெயில் காலத்தில் இந்தப் பிரச்சனை இன்னும் அதிகம். நம் வீட்டுப் பிரிட்ஜை எப்படி சரியாகப் பயன்படுத்தினால் காய்கறிகள் நீண்ட நாள் வாடாமல் இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்
காய்கறிகளை நீண்ட நாட்களுக்கு பிரஷ்ஷாக வைக்க டிப்ஸ்!
- காய்கறிகளை வாங்கிய உடனே அப்படியே பிரிட்ஜில் வைக்காமல், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதில் சிறிது உப்பு, சர்க்கரை மற்றும் வினிகர் கலந்து கழுவ வேண்டும். இது அவற்றின் மேல் இருக்கும் அழுக்கை நீக்கும். அதன் பிறகு ஈரம் போகத் துடைத்து விட்டுப் பிரிட்ஜில் வைப்பது அவசியம்.
- ஈரம் இருந்தால் காய்கறிகள் மிக வேகமாக அழுகிவிடும். காய்கறிகளை போட்டு வைக்க ஜிப் லாக் (Zip lock) பைகள் சிறந்தவை. அது இல்லையென்றால் சாதாரண பிளாஸ்டிக் கவர்களில் சிறு துளைகளை இட்டுப் பயன்படுத்தலாம். இந்த துளைகள் வழியாக காற்று சென்று வருவதால் காய்கறிகள் நீண்ட நாள் பிரஷ்ஷாக இருக்கும்.
- பருத்தித் துணிப் பைகளில் காய்கறிகளை தனித் தனியாக போட்டு வைப்பது ஈரப்பதத்தை உறிஞ்சி, பொருட்களை கெடாமல் பாதுகாக்கும்.
- எல்லாப் பழங்களையும் காய்கறிகளையும் ஒரே டப்பாவில் அல்லது ஒரே பையில் வைப்பது தவறு. ஆப்பிள், தர்பூசணி போன்ற பழங்கள் இயற்கையாகவே 'எத்திலீன்' எனும் வாயுவை வெளியிடும். இது மற்ற காய்கறிகளை மிக வேகமாகப் பழுக்க வைத்து, சீக்கிரம் அழுகச் செய்து விடும். எனவே, இத்தகைய பழங்களை தனித்தனியாக வைப்பது நல்லது.
- திராட்சை பழங்களை கழுவித் துடைத்த பிறகு ஒரு தட்டில் டிஷ்யூ பேப்பரை விரித்து அதன் மேல் வைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
- ஆனால் வாழைப்பழத்தைப் பொறுத்தவரை அதை பிரிட்ஜில் வைக்காமல் வெளியே வைப்பது நல்லது.
- அதேபோல் உருளைக்கிழங்கு, வெங்காயத்தை ஒரு போதும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அவை அறை வெப்பநிலையிலேயே நன்றாக இருக்கும்.
- நம்மில் பலர் இஞ்சி, பூண்டு போன்றவற்றை அப்படியே வைப்போம். இஞ்சி சீக்கிரம் காய்ந்து போகாமல் இருக்க, அதை ஒரு லேசான ஈரத் துணியில் சுற்றி வைத்தால் மாதக்கணக்கில் பிரஷ்ஷாக இருக்கும்.
- பச்சை மிளகாயின் காம்புகளை நீக்கிவிட்டு, ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் அடியில் டிஷ்யூ பேப்பர் விரித்து சேமித்தால், மிளகாய் அழுகாமல் நீண்ட நாள் காரம் குறையாமல் இருக்கும்.
- எலுமிச்சை பழம் காய்ந்து ஓடு போல மாறாமல் இருக்க, அதன் மீது சிறிதளவு சமையல் எண்ணெயை தடவி ஒரு டப்பாவில் போட்டு வைத்தால் சாறு வற்றாமல் இருக்கும்.
- கேரட், பீட்ரூட் போன்ற வேர்க்காய்கறிகளின் நுனிப்பகுதியைச் சிறிதளவு நறுக்கி விட்டுச் சேமித்தால் அவை முளைவிடாமல், சத்து குறையாமல் இருக்கும்.
- வெண்டைக்காய் சீக்கிரம் பிசுபிசுப்பாகாமல் இருக்க, அதன் காம்பு மற்றும் நுனிப்பகுதியை நறுக்காமல் அப்படியே காய வைத்து வைக்க வேண்டும்.
- தேங்காயை அப்படியே வைத்தால் அதன் சுவை மாறும். அதற்குப் பதிலாக தேங்காயை துருவி ஒரு காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்தால் நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தலாம்.
- கொத்தமல்லி, புதினா மற்றும் கறிவேப்பிலை வாடாமல் இருக்க அவற்றின் காம்புகளை நீக்கி விட்டு ஒரு டப்பாவில் போட்டு வைக்கலாம்.
- பொருட்களைச் சரியாக அடுக்குவதோடு மட்டும் நிறுத்தாமல், வாரத்திற்கு ஒரு முறையாவது பிரிட்ஜை சுத்தம் செய்ய வேண்டும். அழுகத் தொடங்கிய ஒரு தக்காளி இருந்தால் கூட, அது மற்ற எல்லாப் பொருட்களையும் மிக வேகமாகப் பாதிக்கும். இந்த எளிய முறைகளைப் பின்பற்றினால் வெயில் காலத்திலும் காய்கறிகள் வாடாமல் இருக்கும்.

0 Comments