சரும பராமரிப்பு என்று வரும் போது முகம் மட்டுமல்லாமல், பாதங்களை பராமரிப்பதும் அவசியமாகும். ஆனால், பெரும்பாலானோர் முகம் சரியாக இருக்கிறதா என்பதை மட்டும் சரிபார்த்து பாதங்களை கண்டுகொள்ளாமல் விடுகின்றனர்.
வானிலை மாற்றம், ஆரோக்கியமற்ற உணவுகள் எப்படி முகத்தில் பருக்கள், சரும வறட்சி போன்றவற்றை ஏற்படுத்துகிறதோ, அதே போல பாதங்களும் பல பாதிப்புகளை சந்திக்கும். உங்கள் பாதங்களில் வெடிப்பு உள்ளதா? பாதம் மிகவும் வறண்டு இருக்கிறதா? பாதங்கள் மென்மையாகவும், புத்துணர்ச்சியுடன் எப்போதும் இருக்கணுமா?
அப்ப, வீட்டில் இருக்கும் சில எளிய பொருட்களை வைத்து செய்யும் ஸ்க்ரப்பை பாதங்களில் பயன்படுத்தி வர பாதம் சாஃப்டாக மாறும் மேலும் வெடிப்புகளும் மறையும். அந்த வகையில், பாதங்களை சாஃப்டாக்கும் பொருட்கள் என்னென்ன? எப்படி பயன்படுத்துவது என பார்க்கலாம் வாங்க.
ஆலிவ் எண்ணெய் மற்றும் உப்பு:
தேவையான பொருட்கள்:
- கல் உப்பு - 1 கப்
- ஆலிவ் ஆயில் - 1/2 கப்
- எலுமிச்சை பழம் சாறு - அரை பழம்
பயன்படுத்தும் முறை:
ஒரு கிண்ணத்தில் உப்பு, ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து விடவும். கூடவே, எலுமிச்சை பழ சாறு சேர்க்கவும். இப்போது, கால்களை தண்ணீரில் கழுவிய பின்னர், வெதுவெதுப்பான நீரில் 15 நிமிடங்களுக்கு பாதங்களை ஊற வைக்கவும்.
பின்னர், நாம் தயார் செய்து வைத்துள்ள ஸ்க்ரப்பை பாதங்களில் தடவி, வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யவும். வெடிப்பு உள்ள இடத்தில் லேசாக ஸ்க்ரப் செய்தால் போதும். 10 நிமிடங்களுக்கு மசாஜ் செய்த பிறகு, வெதுவெதுப்பான நீரை பயன்படுத்து பாதங்களை கழுவவும். பின் துண்டு பயன்படுத்தி பாதத்தை உலர வைக்கவும்.
இறுதியாக மாய்ஸ்சரைஸர் அல்லது ஃபுட் க்ரீம் தடவுவது முக்கியம். வாரத்திற்கு ஒருமுறை இந்த ஸ்க்ரப் பயன்படுத்தி வர, பாதத்தில் உள்ள இறந்த சருமம் நீங்கும் மேலும், பாதம் ஈரப்பதத்துடன் இருப்பதால் வெடிப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும்.
சர்க்கரை மற்றும் தேங்காய் எண்ணெய்:
- சர்க்கரை - 1 கப்
- தேங்காய் எண்ணெய் - 1/2 கப்
பயன்படுத்தும் முறை:
ஒரு கிண்ணத்தில் சர்க்கரை மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை பாதங்களில் தடவுவதற்கு முன், வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடங்களுக்கு கால்களை ஊற வைக்க வேண்டும்.
இப்போது நாம் தயார் செய்து வைத்த ஸ்க்ரப்பை காலகளில் மசாஜ் செய்யவும். குதிகால் மற்றும் தோல் உரிந்த பகுதிகளில் லேசாக ஸ்க்ரப் செய்தால் போதுமானது.
10 நிமிடங்களுக்கு ஸ்க்ரப் செய்த பிறகு கால்களை வெதுவெதுப்பான நீரில் கழுவி, துண்டு பயன்படுத்தி பாதத்தை உலர வைக்கவும். இறுதியாக மாய்ஸ்சுரைசர் அல்லது ஃபுட் க்ரீம் தடவ வேண்டும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வர, பாதம் மென்மையாக இருக்கும்.
0 Comments