Ad Code

Responsive Advertisement

மீண்டும் இந்தியாவில் வேகமெடுக்கும் கரோனா தொற்று - 257 பேர் பாதிப்பு - இருவர் பலி

 



ஆசியாவில் மீண்டும் புதிய கரோனா அலை உருவாகியுள்ளது. இந்தியாவில் கரோனா தொற்றால் 257 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 


ஆசியாவில், குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. தற்போது பரவி வரும் ஒமைக்ரான் பிஏ.2.86திரிபான ஜேஎன்1 வகை கரோனா வைரஸ் பரவல் அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.


பூஸ்டர் தடுப்பூசி போட அறிவுறுத்தல்: மக்கள்தொகை நெருக்கம் மிகுந்த ஹாங்காங், சிங்கப்பூர், சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, முக்கிய நகரங்களில் சுகாதார துறையின் செயல்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 


மக்கள் புதிதாக கரோனா பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு தாய்லாந்து, ஹாங்காங், சிங்கப்பூர் அரசுகள் அறிவுறுத்தியுள்ளன. ஹாங்காங்கில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.


சமீபத்தில் மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்ததில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் விகிதம் இந்த ஆண்டில் உச்சபட்ச அளவை தொட்டுள்ளது என்று ஹாங்காங் சுகாதார பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது. 


சிங்கப்பூரில் கடந்த மே 3-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 28 சதவீதம் அதிகரித்து 14,200 ஆக உள்ளது. மருத்துவமனையில் சேர்க்கப்படுவோர் எண்ணிக்கை சுமார் 30 சதவீதம் உயர்ந்துள்ளது என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தாய்லாந்தில் பெரும்பாலும் 30-39 வயதினரிடம் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மே 17-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 33,030 ஆக அதிகரித்துள்ளது.


முந்தைய வாரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 16,000 ஆக இருந்த நிலையில், தற்போது இரட்டிப்பாகியுள்ளது என்று சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இந்தியாவில் கட்டுப்பாட்டில் உள்ளது: இந்தியாவில் கரோனா பரவல் குறித்து மத்தியசுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்தியாவில் கரோனா பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது. மே 19-ம் தேதி நிலவரப்படி, நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 257 ஆக உள்ளது. 


நாட்டின் மக்கள் தொகையை கருத்தில் கொள்ளும்போது இது மிகமிக குறைவு. தவிர, இது சாதாரண பாதிப்புதான். எனவே, மருத்துவமனையில் அனுமதிக்க அவசியம் இல்லை. இருப்பினும், நிலைமையை மத்திய சுகாதார அமைச்சகம் தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


முக கவசம் அணிய சுகாதார துறை அறிவுறுத்தல்: பொதுமக்கள் பொது இடங்களில் முக கவசம் அணிவதுடன், சரியான தொற்று தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று தமிழக பொது சுகாதார துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உலக சுகாதார நிறுவனம் கடந்த 4-ம் தேதி வெளிட்ட வாராந்திர கரோனா அறிக்கையின்படி, தெற்கு ஆசிய நாடுகளான இந்தியா, நேபாளம், வங்கதேசம், இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் கரோனா பரவல் குறைவாகவே உள்ளது. 


மேலும், விரீயம் இழந்த ஒமைக்ரான் வைரஸின் உட்பிரிவான ஜேஎன்1 வகை தொற்றுகளே காணப்படுவதாகவும், புதிதாக உருமாறிய வைரஸ் பரவவில்லை என்றும் தெரிவித்துள்ளது. சிங்கப்பூர், வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலும் கரோனா தொற்று விகிதம் குறைந்துள்ளது.


இந்தியாவிலும் இந்த ஆண்டில் கரோனா பரவல் மிக குறைந்த அளவே காணப்படுகிறது. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு எவ்வித தீவிர அறிகுறிகளும் இல்லை. 


கரோனா தொற்றால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. ஆனாலும், பொதுமக்கள் பொது இடங்களில் முக கவசம் அணிவதுடன், சரியான தொற்று தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அறிகுறிகள் உள்ளவர்கள், குறிப்பாக காய்ச்சல், நுரையீரல் சார்ந்த இணைநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


மகாராஷ்டிரத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு இருவர் பரிதாபமாக பலியாகினர்.


கடந்த 2020 ஆம் ஆண்டில் உலகையேப் புரட்டிப்போட்ட கரோனா பெருந்தொற்றால், லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். தொடர்ந்து 2 வருடங்கள் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் முடங்கியது. சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் கரோனா வைரஸ் மீண்டும் தலைதூக்கியுள்ளதையடுத்து, இந்தியாவில் கரோனா நிலைமையைச் சுகாதார அமைச்சகம் ஆய்வு செய்து வருகின்றது.


இந்த நிலையில், மகாராஷ்டிரத்தின் மும்பையில் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த இருவர் பலியாகியுள்ளதாக மருத்துவமனை ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார். இறந்தவர்களில் ஒருவருக்கு ஹைபோகால்சீமியா வலிப்புடன் கூடிய நெஃப்ரோடிக் நோயும், மற்றவருக்கு புற்றுநோய் பாதிப்புடன் சிகிச்சை பெற்றுவந்துள்ளனர்.


ஜனவரி முதல் மொத்தம் 6,066 பேருக்கு கரோனா தொற்று பரிசோதிக்கப்பட்டதாகவும், அவற்றில் 106 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 101 பேர் மும்பை, புணே, தாணே மற்றும் கோலாப்பூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.


தற்போது 52 பேர் மருத்துவச் சிகிச்சையில் உள்ளதாகவும் அவர்களின் உடல்நலத்தை கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement