பருவகால மாற்றத்தின்போது தாக்கும் மலேரியா, காலரா, சிக்குன்குனியா போன்ற நோய்களின் பட்டியலில் டெங்கு காய்ச்சல் முதல் இடத்தில் உள்ளது.
ஆரம்ப கட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகளை கண்டறிவது கடினம். சாதாரணமாக ஆரம்பிக்கும் காய்ச்சல் அதிகரித்து கொண்டிருந்தால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
டெங்குவை பரப்பும் கொசு கடித்த நான்கு முதல் 7 நாட்களுக்குள் அதிக காய்ச்சல் வெளிப்படும். டெங்கு காய்ச்சல் பொதுவாக 104 டிகிரி அளவை தாண்டிவிடும். இத்தகைய அதிக வெப்பநிலை அளவை கட்டுப்படுத்த மருந்துகளை சாப்பிடுவதை தவிர முழுமையாக ஓய்வு எடுப்பதும், திரவ உணவுகளை அதிகம் உட்கொள்வதும் இன்றியமையாதது.
அவை டெங்குவை எதிர்த்து போராடுவதற்கு உதவும். ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். அதனால் ரத்த பரிசோதனை மேற்கொண்டு ரத்த அணுக்களின் அளவு போதுமானதாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டியது அவசியமானது.
டெங்கு காய்ச்சலின் மற்றொரு அறிகுறியாக திடீரென்று கடுமையான தலைவலி ஏற்படும். அப்படி வலி அதிகமாக இருக்கும் சமயத்தில் கண் பகுதியில் குளிர்ச்சித் தன்மை நிலவும். காய்ச்சலை காட்டிலும் தலைவலி தீவிரமாக இருந்தால் அது டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி.
உடல்வலியும் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிதான். ஆரம்பத்தில் மூட்டுகள், தசை நாண்கள், எலும்பு பகுதிகளில் வலி அதிகமாக இருக்கும். டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டால் தசைகளில் வலி அதிகரிக்கும். டெங்கு காய்ச்சலுக்கு பிந்தைய அறிகுறியாக நாள்பட்ட மூட்டு வலி உண்டாகும். இந்த காய்ச்சலின்போது உடல் வலி அதிகமாக இருப்பதற்கு உடலில் வைட்டமின்கள், தாதுக்கள் குறைவதே காரணமாகும். ஆதலால் டெங்கு பாதிப்புக்குள்ளாகுபவர்கள் வைட்டமின் உள்ளிட்ட ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
டெங்கு காய்ச்சலின் மற்றொரு அறிகுறியாக சருமத்தில் சிவப்பு நிறத்தில் தடிப்புகள் உருவாகும். சில சமயத்தில் அதிலிருந்து ரத்தம் வழியும். இந்த தடிப்புகள் காய்ச்சல் உருவான ஓரிரு நாட்களில் வெளிப்படும். அப்போது நோயாளிகளின் கண்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும். சருமமும் வெளிர் நிறத்திற்கு மாறும்.
காய்ச்சல் குறைய தொடங்கும்போதும் தடிப்புகள் உருவாகும். இவற்றை குணப்படுத்துவதற்கு குறிப்பிட்ட சிகிச்சை முறைகள் இல்லை. டாக்டர்களிடம் ஆலோசித்து மாய்ச்சுரைசிங் கிரீம்களை பயன்படுத்தலாம்.
டெங்கு காய்ச்சல் பரவுவதை தவிர்க்க சரியான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். டெங்கு கொசுக்கள் வீட்டின் உட்புற பகுதிகள், வீட்டை சுற்றியுள்ள நீர் நிலைகளில்தான் இனப்பெருக்கம் செய்யும்.
அதனால் வீட்டையும், சுற்றுப்புற பகுதிகளையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். கொசு கடிப்பதை தவிர்க்க உடலை முழுவதும் மூடும் ஆடைகளை அணிய வேண்டும். கொசுக்களை விரட்டும் நிவாரணிகளையும் பயன்படுத்தலாம். படுக்கை அறையில் கொசு வலைகளை பயன்படுத்துவது நல்லது. பகலில் தூங்குவதாக இருந்தாலும் கொசு வலையை பயன்படுத்த வேண்டும்.
டெங்கு காய்ச்சல் என்பது என்ன?
``டெங்கு என்பது ஒரு வகையான வைரஸ் காய்ச்சல். டென்-1 (DENV-1), டென்-2 (DENV-2), டென்-3 (DENV-3), டென்-4 (DENV-4) என டெங்குவில் 4 வகைகள் உள்ளன.
டெங்கு எப்படிப் பரவுகிறது?
நல்ல தண்ணீரில் உருவாகக்கூடிய `ஏடிஸ் ஏஜிப்தி' (Aedes Aegypti) என்ற ஒரு வகை கொசுக்கள் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. `ஏடிஸ்' கொசுக்கள் மூன்று வாரங்களுக்குமேல் உயிர்வாழும். பகல் நேரங்களில் மட்டுமே கடிக்கும். உடல் மற்றும் கால்களில் கறுப்பு மற்றும் வெள்ளைநிறப் புள்ளிகள் கொண்ட உடலமைப்பைக் கொண்டுள்ளதால், இவை `புலிக்கொசுக்கள்' என்றும் அழைக்கப்படுகின்றன.
`ஏடிஸ் ஏஜிப்தி' கொசுக்கள் எப்படி நோயைப் பரப்புகின்றன?
``வீடுகளில் சரியாக மூடப்படாத டிரம்கள், தண்ணீர் பிடிப்பதற்காக பைப்லைன்கள் அருகே தோண்டப்பட்ட குழிகள், மொட்டைமாடிகளில் போட்டுவைத்திருக்கும் உபயோகமற்ற பொருள்கள், காலிமனைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் கப்கள், பயனற்ற பொருள்கள், வீடுகளில் சரியாக மூடப்படாத தரைத் தொட்டிகள் (சம்ப்), மேல்நிலைத் தொட்டிகள், டயர்கள், பயன்படுத்தாத உடைந்த சிமென்ட் தொட்டிகள், நீண்டகாலமாகக் கழுவப்படாத தொட்டிகள் போன்றவற்றில் தேங்கியிருக்கும் நல்ல தண்ணீரில் `ஏடிஸ்' கொசுக்கள் முட்டையிட்டுப் பெருகுகின்றன. இது டெங்கு பாதிப்புள்ளவர்களைக் கடித்துவிட்டு மற்றவர்களைக் கடிக்கும்போது ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவுகிறது.
எத்தனை நாள்களில் `ஏடிஸ்' கொசு வளர்ச்சியடையும்?
```ஏடிஸ்' கொசுக்கள் தண்ணீரில் முட்டையிட்டு கொசுப்புழு, கூட்டுப்புழு பருவம் வரை வளர 7 முதல் 10 நாள்களாகும். இந்தக் கொசுக்களின் முட்டைகள் ஓராண்டுவரையிலும் அழியாமல் இருக்கும். மழைக்காலங்களில் நல்ல நீர் தேங்கியிருக்கும் இடங்களில் இந்த முட்டைகள் உயிர்பெற்று நோயைப் பரப்பும்.
`ஏடிஸ்' கொசுவின் வளர்ச்சியை எப்படித் தடுக்கலாம்?
கொசுக்கள் உருவாகும் இடங்களை அழித்து சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொண்டால் மட்டுமே இந்தக் கொசுக்களின் வளர்ச்சியைத் தடுக்க முடியும்.''
டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் என்னென்ன?
`காய்ச்சல், சோர்வு, தலைவலி, உடல்வலி, வாந்தி, வயிற்று வலி, கண்ணுக்குப் பின்புறம் வலி, எலும்பு வலி ஆகியவை டெங்கு காய்ச்சலின் முக்கியமான அறிகுறிகளாகும்.
காய்ச்சல் வந்த பிறகு என்ன செய்ய வேண்டும்?
காய்ச்சல் அறிகுறி தெரிந்தவுடன் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். மருத்துவரால் மட்டுமே தேவையான மருத்துவப் பரிசோதனை செய்து, `இது டெங்கு காய்ச்சலா' அல்லது `பிற காய்ச்சலா' என்பதைக் கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்க முடியும்.
டெங்கு காய்ச்சலை கண்டறிய என்னென்ன பரிசோதனைகள் செய்யப்படுகின்றன?
``ஆரம்ப அறிகுறிகள் அனைத்தும் வைரஸ் காய்ச்சல்களில் காணப்படும் பொதுவான குணங்கள் என்பதால் உடனே நோயை உறுதி செய்ய இயலாது. காய்ச்சல் 3 நாள்களுக்கு மேல் நீடித்தால், உடனே மருத்துவமனைக்குச் சென்று, என்.எஸ்.ஐ ஆண்டிஜன் (NS1 Ag), டெங்கு ஐ.ஜி.எம். (Dengue IgM ) அல்லது டெங்கு ஐ.ஜி.ஜி (Dengue IGG) உள்ளிட்ட ரத்தப்பரிசோதனைகளை செய்துகொள்ளவேண்டும்.
பொதுவாக ஒருவருக்கு ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை சுமார் 3 லட்சம் வரை இருக்கும். டெங்கு காய்ச்சல் வந்தவருக்கு தட்டணுக்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் கீழே குறைந்துவிடலாம். எனவே, ப்ளேட்லெட் (Platelet) என்னும் ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை மற்றும் ரத்தத்தின் நீர்ப்பளவு (Heamatocrit) உள்ளிட்ட பரிசோதனைகளையும் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் 2 அல்லது 3 நாள்கள் தொடர்ந்து செய்துகொள்ளவேண்டும்."
டெங்குவுக்கு எந்த மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது?
``டெங்கு காய்ச்சலுக்கு எனத் தனி சிகிச்சை எதுவும் இல்லை. காய்ச்சலைக் கட்டுப்படுத்த பாராசிட்டமால் (Paracetomol) மாத்திரையும், உடல் வலியைப் போக்க உதவும் மாத்திரைகளும் தரப்படும். சிலருக்கு மட்டுமே `அதிர்ச்சி நிலை' (Dengue Shock Syndrome) ஏற்படும். அதற்கு குளுக்கோஸ் மற்றும் சலைன் (Dextrose Saline) தேவையான அளவுக்கு ஏற்றப்பட வேண்டும். வைரஸ் பாதிப்பால், ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டேவரும். தட்டணுக்கள் குறைந்தவர்களுக்கு அதை ஈடுகட்ட நரம்பு மூலமாக தட்டணுக்கள் கொண்ட ரத்தம் செலுத்தப்பட வேண்டும். உடலில் உள்ள நீர்ச்சத்து குறையாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். கொசுவலைப் பாதுகாப்புக்குள் வைத்துச் சிகிச்சை அளிக்க வேண்டும். டெங்கு ஐ.ஜி.எம்., ஹெமெட்டோ கிரீட் மற்றும் தட்டணுக்கள் பரிசோதனைகளின் மூலம் டெங்கு குணமாகிவிட்டதா என்று அறியலாம்.
வீட்டிலேயே டெங்குவுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளலாமா?
டெங்கு காய்ச்சலைப் பொறுத்தவரை மருத்துவக் கண்காணிப்பில் இருப்பது மிகவும் நல்லது. டெங்கு பாதிப்புக்கு உள்ளாகிறவர்களில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவான நபர்களுக்கு ரத்தக்கசிவு நோய் மற்றும் `டெங்கு ஷாக் சிண்ட்ரோம்' ஏற்படலாம். அதாவது, தட்டணுக்கள் குறைந்து, நுரையீரல் கூடு பகுதியில் நீர் தேங்கும்போது `டெங்கு ஷாக் சிண்ட்ரோம்' வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. அந்தத் தருணத்தில் உயிரிழப்பு ஏற்படும் ஆபத்து உண்டு. எனவே மருத்துவக் கண்காணிப்பிலிருந்து, உரிய நேரத்தில் உரிய மருந்துகள் எடுத்துக்கொள்வதன் மூலம் இந்த நிலை ஏற்படாமல் காப்பாற்ற முடியும். சுய சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் காய்ச்சல் வந்தவுடனேயே மருத்துவரை அணுகுவதே பாதுகாப்பானது.
டெங்கு காய்ச்சல் வந்து குணமாகிவிட்ட ஒருவருக்கு மீண்டும் வருமா?
நிச்சயமாக வரலாம். ஆனால், ஏற்கெனவே வந்த வைரஸ் பாதிப்பு மீண்டும் வராது. டெங்குவில் டென்-1 (DENV-1), டென்-2 (DENV-2), டென்-3 (DENV-3), டென்-4 (DENV-4) என 4 வகை வைரஸ்கள் உள்ளன.
மீண்டும் காய்ச்சல் வருவதற்கான வாய்ப்புகள் என்னென்ன?
டெங்கு காய்ச்சல் வந்து குணமாகிவிட்டவரை `ஏடிஸ்' கொசு கடித்தால் மீண்டும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இரண்டாவது முறை வரும் டெங்கு முன்பு வந்ததைவிடத் தீவிரமாக இருக்கும்.
டெங்கு காய்ச்சல் வந்து குணமடைந்தவர் மீண்டும் டெங்கு பாதிப்பிற்கு உள்ளாகாமல் இருக்க என்ன செய்யலாம்?
டெங்கு காய்ச்சல் வந்து குணமடைந்தவர் தொடர்ந்து 3 முதல் 5 நாள்கள் வரை ஓய்வில் இருக்கவேண்டும். நீர்ச்சத்து நிறைந்த கஞ்சி, இளநீர், பழச்சாறு போன்றவற்றை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் உடற்பயிற்சிகள், யோகாசனங்கள் செய்யலாம். மீண்டும் டெங்கு தொற்றுள்ள கொசு கடிக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். நம்மைச் சுற்றியுள்ள இடத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை?
காய்ச்சல் வந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் செல்லவேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி ரத்தப் பரிசோதனைகள் செய்துகொள்ளவேண்டும். மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்துக் கடைகளுக்குச் சென்று தாமாகவே மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
டெங்குவுக்குத் தடுப்பூசி உண்டா?
மிகச்சில நாடுகளில் டெங்வாக்ஸியா (Dengvaxia) என்ற தடுப்பூசி, உலக சுகாதார நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை இதற்கான கிளினிக்கல் ட்ரையல் (Clinical Trials) ஆராய்ச்சி நடந்துவருகிறது. தடுப்பூசிகளை அங்கீகரிக்கும் தேசிய அமைப்பான அபெக்ஸ் கமிட்டி (Apex Committee) இதுவரை இந்தத் தடுப்பூசியை அங்கீகரிக்கவில்லை.
டெங்கு, முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதா, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியுமா?
முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில், டெங்கு ரத்தக் கசிவு நோய் மற்றும் `டெங்கு ஷாக் சிண்ட்ரோம்' மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கும் சூழல் வந்தால் அதற்கான செலவு சேர்க்கப்பட்டுள்ளது."
காப்பீட்டுத் திட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க மறுக்கும் சூழலில் என்ன செய்யவேண்டும்?
முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுக்கக் கூடாது. அப்படி மறுக்கும்பட்சத்தில் 044-24350496 / 24334811 என்ற தொலைபேசி எண்களிலும் 9444340496 / 9361482899 என்ற மொபைல் எண்களிலும் தொடர்புகொள்ளலாம். டெங்கு பற்றிய சந்தேகங்களுக்கும் இந்த எண்களைத் தொடர்பு கொள்ளலாம். 104 என்ற எண்ணையும் 24 மணி நேரமும் தொடர்புகொள்ளலாம்.
டெங்கு காய்ச்சலைத் தடுக்கவும் குணப்படுத்தவும் அரசு செய்துள்ள ஏற்பாடுகள்?
தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கான பிரத்தியேக சிகிச்சை மையங்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன. காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுபவர்களுக்குத் தேவையான படுக்கை வசதிகளும், காய்ச்சலுக்கான சிறப்புப் பிரிவுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இயற்கையான முறையில் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்திக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் நிலவேம்புக் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தூய்மை செய்யப்படாத இடங்கள் மற்றும் டெங்குப் புழுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டால் பொதுச் சுகாதார சட்டம், 1939 பிரிவுகள் 83 மற்றும் 84 சட்டப்பிரிவுகள் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 269-ன்படி, உரிமையாளர்மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
டெங்கு தடுப்பில் பொதுமக்களின் பங்களிப்பு என்ன?
``வீடு மற்றும் சுற்றுப்புறங்களில் கிடக்கும் பயன்படுத்தாத பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் கப்கள், தேங்காய் ஓடுகள், உடைந்த வாளி, டயர்கள் ஆகியவற்றை அகற்ற வேண்டும். தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகளை வாரம் ஒருமுறை பிளீச்சிங் பவுடர் போட்டு நன்றாகத் தேய்த்துக் கழுவி, கொசு புகாதவாறு மூடிவைக்கவேண்டும். கொசு வலை போன்ற கொசுத்தடுப்பு சாதனங்களைப் பயன்படுத்த வேண்டும்.
நிலவேம்புக் குடிநீர் குடித்தால் டெங்கு காய்ச்சல் வராதா?
``டெங்கு மட்டுமல்லாது எல்லாக் காய்ச்சல்களுக்கும் நிலவேம்புக் குடிநீர் குடிப்பது பலன் தரும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் நிலவேம்புக் குடிநீர் அருமருந்தாகும். காய்ச்சல் வந்தவர்கள் மட்டுமல்லாது, அனைவருமே நிலவேம்புக் குடிநீர் குடிக்கலாம். கர்ப்பிணிகள், ஒரு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் தாராளமாகக் குடிக்கலாம். நிலவேம்புக் குடிநீரை சாப்பாட்டுக்கு முன் குடிப்பது சிறந்தது.
நிலவேம்புக் குடிநீர், யார் எவ்வளவு குடிக்க வேண்டும்?
நிலவேம்புக் குடிநீரை, இளஞ்சூடாகக் குடிப்பதுதான் சிறந்தது. அதுவும் தயாரித்த 3 மணி நேரத்துக்குள் குடித்து விட வேண்டும். சாதாரணமாக, ஒரு நாளைக்கு 10 மி.லி முதல் 50 மி.லி வரை அருந்தலாம். குழந்தைகள் (3 - 12 வயதுக்குட்பட்டோர்) 15-30 மி.லி, பெரியவர்கள் 15-ல் இருந்து 50 மி.லி வரை அருந்தலாம். காய்ச்சல் பாதித்தவர் ஒரு நாளைக்கு 3 தடவை குடிக்கலாம். காய்ச்சல் இல்லாதவர்கள் ஒருநாளைக்கு ஒருமுறை குடித்தால் போதும்.
டெங்கு உறுதி செய்யப்பட்டால், ஆடாதொடைச்சாறு 15 முதல் 30 மி.லி, பப்பாளி இலைச்சாறு 10 மி.லி. முதல் 30 மி.லி குடிக்கலாம். ரத்தத்தட்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்க இவை உதவும். இதையும் சுயமாகச் செய்யக் கூடாது. மருத்துவரின் ஆலோசனை பெற்றே அருந்த வேண்டும். ரத்த தட்டணுக்கள் 50 ஆயிரத்தை விடக் குறையும்போது ரத்தம்வழியாக தட்டணுக்கள் ஏற்றப்பட வேண்டியது அவசியம்.
டெங்கு பாதித்தவர்கள் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள்!
இனிப்பு சுவையுள்ள உணவுகளைக் குறைத்து, பாகற்காய் உள்ளிட்ட கசப்பு சத்துள்ள உணவுகளை அதிகம் சேர்க்கவேண்டும். காரம் அதிகமாகச் சாப்பிட விரும்புபவர்கள் மிளகாய்க்குப் பதிலாக மிளகைச் சேர்த்துக் கொள்ளலாம். அரிசி அல்லது தானியத்தில் செய்த கஞ்சியை இரண்டு வேளை கொடுக்கவேண்டும். தினசரி 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். மேலும், பழச்சாறுகள், இளநீர், சீரகத் தண்ணீர் போன்றவற்றையும் அவ்வப்போது குடிக்கலாம்.
அன்னாசிப் பூ சேர்த்துத் தயாரித்த தேநீர், லவங்கப்பட்டை சேர்த்த டீ, திரிகடுகம் காபி ஆகியவற்றையும் குடிக்கலாம். கீரையை சூப் செய்து குடிக்க வேண்டும். அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும். எண்ணெய்யில் பொரித்த உணவுகளையும் தவிக்க வேண்டும்.
இதன் அறிகுறிகள் :
அதிக காய்ச்சல் ; கடுமையான தலைவலி , கண்களுக்கு பின்னால் வலி, தசை மற்றும் மூட்டு வலி, சுவை இழப்பு மற்றும் பசியின்மை, மார்பு மற்றும் மேல் மூட்டுகளில் மீது சொறி போன்ற தோற்றம், குமட்டல் மற்றும் வாந்தி.
டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட குழந்தைகளை வீடுகளில் வைத்து பராமரிப்பது எப்படி?
டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளுக்கு அடிக்கடி நீராகாரங்களையும், தண்ணீரையும் கொடுத்து கொண்டிருக்க வேண்டும். வாந்தி வருவதாக இருந்தாலும் இவற்றை கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு என்னென்ன நீராகாரங்கள் கொடுக்கலாம்?
ஓஆர்எஸ் (oral rehidrations solution) எனப்படும் வாந்தி பேதி நேரத்தில் கொடுக்கும் உப்புக் கரைசல், இளநீர், பழச்சாறுகள், பால், கஞ்சி ஆகியவற்றைக் கொடுக்கலாம். திட உணவுகளை உட்கொண்டால் அவற்றையும் கொடுக்கலாம்.
மருத்துவமனையில் எந்த நிலையில் சேர்க்க வேண்டும்?
குழந்தைகள் நீரோ, நீராகாரங்களையோ அருந்தாமல் இருந்தால், சிறுநீர் கழிக்கும் அளவு குறைந்தால், குழந்தைகள் மிகவும் சோர்வடைந்து மயக்க நிலையில் இருந்தால் அவர்களுக்கு நரம்பு மூலம் நீர்ச்சத்து, உப்புச்சத்து கொடுக்கப்பட வேண்டும்.
எனவே அவர்களை மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். மேலும் குழந்தைகளுக்கு வாய், மூக்கு, மலத்துவாரம், பல் வழியாக ரத்தக் கசிவு காணப்பட்டால் கண்டிப்பாக அவர்களை மருத்துவமனையில் கால தாமதம் இல்லாமல் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து விட வேண்டும்.
குழந்தைகள் அனைவருக்கும் ரத்தம் கொடுக்க வேண்டும் என்பது உண்மையா?
உண்மை கிடையாது. எல்லா குழந்தைகளுக்கும் ஏற்ற வேண்டியிருக்காது. ரத்தக் கசிவு ஏற்படும் குழந்தைகளில் பிளேட்லெட் எண்ணிக்கைகள் அதிரடியாகக் குறைந்து அபாய நிலையில் உள்ள குழந்தைகளுக்கு ரத்தமோ அல்லது பிளேட்லெட்டுகளையோ ஏற்ற வேண்டி இருக்கலாம்.
ஆண்டிபயாட்டிக் கொடுக்கலாமா? கொடுத்தால் உதவுமா?
டெங்கு காய்ச்சல் வைரஸ் வகை என்பதால் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் உபயோகப்படாது.
டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
பகல் நேரங்களில் கடிக்கும் ஏடிஎஸ் வகை கொசுக்களால் மட்டுமே இந்த காய்ச்சல் ஏற்படுகிறது. எனவே பகல் நேரங்களில் கொசுக்கள் கடிக்காமல் விழிப்புடன் இருக்க வேண்டும். வீடுகள், தெருக்களில் சுத்தமான தண்ணீர் நாள்படத் தேங்காமல் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
டெங்கு காய்ச்சலால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?
டெங்கு காய்ச்சல் வந்த 4 அல்லது 5 நாள்களில் சிலருக்கு மட்டுமே ஷாக்சின்ட்ரோம் விளைவுகள் ஏற்படுகின்றன. ரத்தத்தில் உள்ள நீர் பிளாஸ்மா ரத்தக் குழாயை விட்டு திசுக்களுக்கு இடையே கசிவதால் ரத்த நாளங்களில் உள்ளே இருக்கும் ரத்தத்தின் அளவும், நீர்த்தன்மையும் குறைந்து விடுகிறது. இதனால் ரத்தம் ஓட் டம் குறைபடுவதுடன் ரத்த அழுத்தமும் குறைகிறது.
டெங்கு காய்ச்சலை உறுதி செய்ய ரத்தப் பரிசோதனை உள்ளதா?
1) Card, 2) Eliza, 3) Immunoflorescence, 4) PCR
தற்போதுள்ள பரிசோதனைகள் மூலம் முதல் நாளில் இருந்தே டெங்கு வைரஸ் தாக்குதலை கண்டறிய முடியும்.
டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க தடுப்பூசி ஏதும் உள்ளதா?
தற்போது ஏதும் இல்லை. ஆனால் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
டெங்கு காய்ச்சல் என்றால் பயப்பட வேண்டுமா?
எல்லா டெங்கு காய்ச்சலுக்கும் பயப்பட வேண்டியது இல்லை. ஒரு வயதுக்கு கீழுள்ள குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் தீவிரமாக இருந்தால் அவர்களை தொடக்க நிலையிலேயே மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெறுவது நல்லது. சரியான நேரத்தில் மருத்துவரிடம் குழந்தைகளை காண்பிப்பதன் மூலம் நாம் பயப்படாமல் இருக்கலாம்.
டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறாமல் தொக்கம் எடுப்பது, கயிறு கட்டுவது, சீர் தட்டுவது என்றெல்லாம் மூட நம்பிக்கைகளில் இறங்கக் கூடாது.
டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உரிய நீராகாரங்களை கொடுத்து, உரிய நேரத்தில் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெறுவதன் மூலம் குணம் பெற முடியும்.
டெங்கு எச்சரிக்கை:-
வீடு உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
காய்ச்சல் 3 நாட்களுக்கு மேல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
குழந்தைகளுக்கு நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
தொடர்ந்து காய்ச்சல் இருக்கும் குழந்தைகளுக்கு விடுமுறை அளிக்க பள்ளி நிர்வாகம் முன்வரவேண்டும்.
டெங்கு காய்ச்சலை தடுக்க பள்ளியின் ஒத்துழைப்பும் அவசியமாகிறது.
பாரசிட்டமால் மருந்து கொடுக்கலாம்; ஈரத்துணியை வைத்து உடல் வெப்பத்தை குறைக்கலாம்.
தொடர்ந்து தலைவலி, உடல்சோர்வு, வயிற்றுவலி, வாந்தி இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
3 நாட்களுக்கு மேல் அபாய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக ரத்த பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
உடனடியாக மருத்துவமனைக்கு வந்தால் காய்ச்சல் பாதிப்பில் இருந்து மீளலாம்.
அல்லது 7 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டால் காய்ச்சல் பாதிப்பில் இருந்து மீள்வது சிக்கலாகிவிடும்.
தொடர்ந்து காய்ச்சலை அனுபவிப்பது:
தொடர்ச்சியான காய்ச்சல் டெங்கு இருப்பதற்கான ஒரு அறிகுறி ஆகும். காய்ச்சலோடு சேர்த்து தோலில் சிராய்ப்புகள், சிறுநீர் மற்றும் மலத்தில் ரத்தம் வெளியேறுதல் போன்றவையும் இதன் அறிகுறிகள். இது ஏழு நாள் காய்ச்சல் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் போது அதிக காய்ச்சல், மோசமான தலைவலி, சோர்வு மற்றும் தசைகள் மற்றும் மூட்டுகளில் வலி போன்ற அறிகுறிகளும் தென்படும்.
தடிப்புகள்:
காய்ச்சல் வந்த இரண்டு முதல் ஐந்து நாட்களுக்குப் பிறகு தோலில் தடிப்புகள் தோன்றுவது டெங்கு இருப்பதற்கான குறிகாட்டியாகும். மேற்தோலின் அடியில் உட்புற ரத்தக்கசிவு காரணமாக தோலில் சிராய்ப்புகள் ஏற்படும். இந்த தடிப்புகள் பொதுவாக அம்மை ஏற்படும் பொழுது தோன்றக்கூடிய காயம் போல காணப்படும்.
குமட்டல் மற்றும் வாந்தி:
கண்களின் பின்புறத்தில் வலி, குமட்டல், வாந்தி மற்றும் ஈறுகள் அல்லது மூக்கில் ரத்த கசிவு போன்றவை டெங்கு காய்ச்சலுக்கான பிற அறிகுறிகள். இது போன்ற அறிகுறிகள் இருக்கும் பொழுது உடனடியாக மருத்துவரின் உதவியை நாடுவது அவசியம். பொதுவாக இந்த அறிகுறிகள் இரவு நேரத்தில் மோசமாகலாம் என்பதால் பகல் நேரத்தில் இதற்கான தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்வது முக்கியமாக கருதப்படுகிறது.
உட்புற ரத்தக்கசிவு:
பொதுவாக டெங்கு காய்ச்சலின் போது பிளேட்டிலெட் செல்களின் எண்ணிக்கை வெகு விரைவாக குறையக்கூடும். இது டெங்கு காய்ச்சலின் மிகவும் தீவிரமான ஒரு நிலையாக கருதப்படுகிறது. இது த்ரோம்போசைட்டோபினியா (Thrombocytopenia) என்று அழைக்கப்படுகிறது. கூடுதலாக டெங்கு காய்ச்சல் இருக்கும் பொழுது குடலின் சுவர்களில் ரத்தக் கசிவு ஏற்பட்டு, அதனால் மலம் கழிக்கும் பொழுது மலத்தோடு ரத்தம் வெளியேறுகிறது.
டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க குறிப்பிட்ட சிகிச்சை முறை எதுவும் கிடையாது. எனினும் அதன் அறிகுறிகள் மோசமாவதை தடுக்க ஒரு சில முயற்சிகளை எடுக்கலாம். நீங்கள் நீண்ட நாட்களாக தொடர்ச்சியாக அனுபவிக்கும் அறிகுறிகளை அலட்சியமாக கருதக்கூடாது. அவ்வாறு செய்வது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். ஆகவே விழிப்புடன் இருந்து உங்கள் ஆரோக்கியத்தை நல்ல முறையில் கவனித்துக் கொள்ளுங்கள்.
0 Comments