தீபாவளி திருநாளில், விடியற்காலையில் எழுந்து, வீட்டில் உள்ள அனைவரும் எண்ணெய் தேய்த்து குளிப்பது சடங்கு. ஆனால், காலப்போக்கில் அனைத்தும் மாறிய நிலையில், எண்ணெய் தேய்த்து குளிக்கும் முறையிலும் பல மாற்றங்கள் வந்து விட்டன.
ஆனால், முறையாக எப்படி எண்ணெய் தேய்த்து குளிப்பது? அந்த எண்ணெய்யை எப்படி காய்ச்சுவது? இப்படி செய்வதால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்...
சிலர் நல்லெண்ணைய் வாங்கி அப்படியே தலையில் தேய்த்து குளிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இப்படி செய்வதற்கு பதிலாக, அடுப்பில் ஒரு இரும்பு சட்டியை வைத்து அதில் நல்லெண்ணையை ஊற்றவும்.
மிதமான தீயில் எண்ணெய் சூடானதும் சிறுது சீரகம், தோல் சீவி இடித்து வைத்த சிறு துண்டு இஞ்சி, இடித்து வைத்த 2 பல் பூண்டு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வைத்திருந்து அடுப்பை அணைக்கவும்
சூடு ஆறிய பின்னர், எண்ணெய்யை வடித்து தலையில் தேய்க்க வேண்டும்.
எண்ணெய் தேய்க்கும் முறை:
வீட்டில் உள்ள அனைவரும் காலை எழுந்து பல் துலக்கிய பின்னர் ஒரு இடத்தில் வரிசையாக அமர வேண்டும். வீட்டில் உள்ள மூத்தவர், நாம் காய்ச்சி வைத்திருக்கும் எண்ணெய்யை ஒரு கிண்ணத்திலும், மற்றொரு கிண்ணத்தில் சீயக்காய் பொடியை, வீட்டு பூஜை அறையில் உள்ள சுவாமி படத்திற்கு கீழ் வைத்து பூஜை செய்ய வேண்டும்.
பின்னர், அதை எடுத்து வந்து, அமர்ந்திருப்பவர்கள் முன்னால் தரையில் மூன்று சொட்டு நல்லெண்ணய்யும், சீயக்காய் பொடியையும் வைக்க வேண்டும்.
இப்படி செய்து, பூமி தாயை வணங்கிய பின்னர், தரையில் வைத்திருந்த எண்ணெய்யை வழித்து முதலில் அமர்ந்திருப்பவர் தலையில் கீழ் இருந்து மேலாக தேய்க்க வேண்டும். குறிப்பாக, இதனை வலது கையால் தான் செய்ய வேண்டும். (ஆரம்பத்தில் மட்டும், தரையில் வைத்தால் போதுமானது)
மூன்று முறை நல்லெண்ணையும், சீயக்காய் பொடியையும் தேய்த்து அரை மணி நேரம் ஊற விட வேண்டும். அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப நல்லெண்ணையை உடலில் தேய்க்கவும் செய்யலாம். அரை மணி நேரம் உடலில் எண்ணெய்யை நன்றாக ஊற வைத்து பின்னர் வெதுவெதுப்பான வெந்நீரில் குளிக்க வேண்டும்.
எண்ணெய் குளியலின் அவசியம்:
நமது உடலுக்கு எண்ணெய் சத்து என்பதும் அவசியமானது. முடி மற்றும் சருமம் இரண்டுக்கும் இயல்பிலேயே மிதமான கொழுப்பு மற்றும் எண்ணெய் சுரக்கும் தன்மை இருக்கிறது.
இந்த இரண்டுமே நம் சருமத்தையும் கூந்தலையும் பாதுகாக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கின்றன. இருப்பினும், வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதைக் கட்டாயம் செய்வது நம் உடல் ஆரோக்கியத்தை வளப்படுத்த பெரிதும் உதவியாக இருக்கும்.
பொதுவாகவே, நம் உடலின் வெப்பத்தன்மை அதிகரிப்பதால் பல்வேறு விதமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, வெயில் காலங்களில் வேனல் கட்டிகள், வியர்க்குரு போன்றவை அதிகம் ஏற்படுகின்றன.
எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால், இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.
எண்ணெய் குளியல் செய்ய சரியான நேரம்:
காலை இதமான வென்நீரில் தான் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
சீயக்காய் அல்லது நலுங்குமாவை பயன்படுத்தலாம். எண்ணைக் குளியல் செய்த அன்று பாலுறவு கூடாது. பகலுறக்கம் கூடாது.
கடுமையான வெய்யிலில் வேலை செய்யகூடாது. குளிர்ந்த உணவுகள் கண்டிப்பாக கூடாது.
எண்ணெய் குளியல் எடுப்பதால் கிடைக்கும் அளப்பரிய நன்மைகள்
எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் நம்மைச் சுற்றிலும் ஒரு புகை வளையம் உருவாகின்றது என்பதை ஆய்வின் மூலம் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இந்த வளையம் இருப்பதால் கோள்களிலிருந்து வரும் காந்த அலைகள் உடலுக்குள் நுழைய முடியாமல் போகின்றது.
மேலும் உடற்சூடு சீராகும், அழகுகூடும், சருமம் மென்மைபெரும், ஐம்புலனுக்கும் நல்ல பலன் கிடைக்கும்.
தலை முடி நன்கு வளரும், நல்ல குரல் வளம் கிடைக்கும், என்பதுடன் எலும்புகள் பலப்படும்.
குளியலுக்கு உகந்த எண்ணெய் எது?
உடலில் தேய்ப்பதற்கு நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
இந்த எண்ணெய்களின் குளிர்மை சிலருக்கு ஒத்துவரவில்லை என்றால், எண்ணெயுடன் இரண்டு பூண்டு, ஒரு காய்ந்த மிளகாய், ஐந்து மிளகு சேர்த்து முப்பது விநாடி அடுப்பில் காய வைத்துத் தேய்த்துக் குளித்தால் குளிர்ச்சி குறைவாக இருக்கும்.
மருத்துவர் ஆலோசனையுடன் நம் உடலுக்கு நலம் தரும் பிரத்யேக எண்ணெய்களையும் பயன்படுத்தலாம்.
0 Comments