அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படும் சைனீஸ் புல்டாக் நூடுல்ஸை சமைத்து சாப்பிட்டு 15வயது சிறுமி உயிரிழந்துள்ளார்' என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
திருச்சியில் நிருபர்கள் சந்திப்பில் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள 4 பன்னாட்டு விமான நிலையங்களிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
எல்லா விமான நிலையங்களிலும் வெளிநாட்டு பயணிகளின் வெப்பத்தை ஆய்வு செய்யப்படுகிறது. ஒவ்வொரு விமான நிலையங்களிலும் தனிமைப்படுத்தும் அறை தயாராக உள்ளது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட 4 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் 10 படுக்கைகள் கொண்ட குரங்கம்மை வார்டுகளும் தயார் நிலையில் உள்ளது.
நடவடிக்கை
தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு டெங்கு காய்ச்சலால் 11 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்புகளின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தாலும், இறப்புகளின் எண்ணிக்கை மிக குறைந்த அளவில் தான் உள்ளது.
4 பேர் மட்டும் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத காரணத்தால் உயிரிழந்துள்ளனர். தடை செய்யப்பட்டுள்ள மருந்துகள் மற்றும் போதையை உருவாக்கும் மருத்துகளை விற்பவர்கள் மீது அதிகாரிகள் கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
15 வயது சிறுமி பலி
திருச்சியில் அரியமங்கலம் பகுதியை சேர்ந்த 15வயது சிறுமி ஜாக்குலின் அமேசான் தளத்தில் விற்கப்படும் சைனீஸ் புல்டாக் நூடுல்ஸை வாங்கி சமைத்து சாப்பிட்டு உயிரிழந்தார். சைனா நூடுல்ஸ் மொத்த விற்பனையாளரிடம் இருந்து காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
800 கிலோ
திருச்சியில், இதுவரை 800 கிலோ உணவுப் பொருட்களை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தற்போது ஆய்விற்காக அனுப்பப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படும் நூடுல்ஸால் 15 வயது சிறுமி உயிரிழந்ததாக வெளியான தகவல் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி அமேசான் தளத்தில் உணவுப்பொருட்கள் வாங்கும் பெற்றோர்களுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments