தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் கும்பிடு போட்டதில் பெருமைதான் என்று பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை புதன்கிழமை தெரிவித்தார்.
கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அண்ணாமலை, அவரது நினைவிடத்தில் கும்பிடு போட்டதாகவும், அவருக்கு அரசியல் அனுபவம் இல்லை என்றும் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில், ஆர்.பி. உதயக்குமாரின் விமர்சனத்துக்கு செய்தியாளர்கள் சந்திப்பின்போது அண்ணாமலை பதிலளித்துள்ளார்.
அவர் பேசியதாவது:
“கலைஞர் கருணாநிதிக்கு கும்பிடு போடுவதில் தவறில்லை, ஒருவரின் காலில் விழுவதுதான் தவறு. சசிகலா நின்றால் 100 அடி தள்ளி உதயக்குமார் நிற்பார்.
எங்கள் இரு கட்சிகளுக்கும் சித்தாந்தம் வேறென்றாலும், 5 முறை முதலமைச்சராக இருந்தவரும், தமிழகத்துக்கு அவர் செய்திருக்கக் கூடிய பணிக்காகவும் அவரது நினைவிடம் சென்று கும்பிடு போடுவதில் பெருமைதான். அதை சிறுமையாக பார்க்கவில்லை.
மேலும், வாஜ்பாய் ஆட்சியில் எங்களின் கூட்டணியில் 5 ஆண்டுகள் இருந்துள்ளனர். பாஜக குறித்து தவறாக தமிழகத்தில் பிரசாரம் செய்யப்படுகிறது, கட்சித் தொண்டர்கள் மக்களிடம் சென்று எடுத்துரைக்க வேண்டும் என்று கருணாநிதிதான் கூறினார்.
80 ஆண்டுகள் அரசியல் அனுபவமும், 50 ஆண்டுகள் நேரடி அரசியல் அனுபவமும் கொண்டவர் கருணாநிதி. அவரின் நினைவு நாணய வெளியீட்டு விழாவுக்கு சென்றதைகூட கொச்சைப்படுத்துவது தவறு.
அண்ணாவின் நினைவிடத்திலும் கும்பிடு போட்டுள்ளேன். கடவுள் நம்பிக்கையில் எங்களுக்கும் அவருக்கு ஆயிரம் வேறுபாடுகள் உள்ளன. ஜெயலலிதாவுக்கும் மரியாதை செலுத்துவேன்.
யார் காலிலும் விழவில்லை, கம்பீரமாக நடந்து சென்று முதுகெலும்பு வளையாமல் மரியாதை செலுத்தி வந்ததில் பெருமைப்படுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்ற கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாணயத்தை வெளியிட்டார்.
மத்திய அமைச்சர் எல். முருகன், பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலையும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நாணய வெளியீட்டு விழாவுக்கு முன்னதாக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் கருணாநிதி நினைவிடம் சென்ற பாஜக தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
0 Comments