வாரத்தில் செவ்வாய், புதன் ஆகிய இரண்டு நாள்கள் மட்டும் ஓட்டுநர் பள்ளியில் பயின்றோரை தேர்வுக்கு அனுமதிக்க வேண்டும் எனவும், மற்ற நாள்களில் இதர விண்ணப்பதாரர்களுக்கு ஓட்டுநர் தேர்வு வைக்க வேண்டும் எனவும் போக்குவரத்துத் துறை ஆணையர் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் கடந்த செப்.12ம் தேதி முதல் ஓட்டுநர், பழகுநர் தேர்வை புறக்கணித்தனர். இதன் தொடர்ச்சியாக, சென்னை, தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரை, சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
பின்னர் அவர்கள் அளித்த பேட்டியில், ‘வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 2 நாள்கள் மட்டும் எங்களது மாணவர்களை அனுமதித்தால், அனைவராலும் ஓட்டுநர் தேர்வில் பங்கேற்க முடியாது. இதுகுறித்த எங்களது நியாயமான கோரிக்கையை அமைச்சரிடம் தெரிவித்தோம். எனினும், இது எங்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்பதால் அடுத்தகட்ட போராட்டம் குறித்து தொழிற்சங்கத்தினரிடம் பேசி வருகிறோம். வழக்கமாக அனைத்து நாள்களிலும் ஓட்டுநர் தேர்வில் எங்களது மாணவர்களை அனுமதிக்காவிட்டால் மிகப்பெரியளவில் முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்’ என்றனர்.
0 Comments