Ad Code

Responsive Advertisement

415 தனியார் பள்ளிகள் மூடப்படும் அபாயம் - மாணவர் சேர்க்கைக்கு தடை; கல்வித்துறை அதிரடி

 


தமிழகத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளிகளில் 25 மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் ஆரம்ப அனுமதியை இதுவரை பெறவில்லை. மேலும், 390 நர்சரி, பிரைமரி பள்ளிகள் தொடக்க அனுமதி பெறவில்லை. எனவே, இவற்றை மூட பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நாளை நடக்கிறது. அந்த கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க உள்ளனர்.


தொடக்க கல்வித்துறையின் கீழ் செயல்படும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விவரம், பழுதான பள்ளிகளின் எண்ணிக்கை, கட்டிடங்களின் எண்ணிக்கை, நர்சரி, பிரைமரி பள்ளிகளின் அங்கீகாரம் பெறப்பட்ட விவரம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில், படிக்கும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக கல்வித்துறையின் தகவல் மையத்துக்கு 30 மனுக்கள் வந்துள்ளன. அந்த மனுக்களில் 5 மனுக்கள் மீது மட்டுமே விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் 25 மனுக்களின் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது.


பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் முதன்மைக்கல்வி அலுவலர்கள் மாவட்ட கல்வி அலுவலர்கள் பள்ளிகளின் அங்கீகாரம் தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும், திருவள்ளூர் மாவட்டத்தில் 343 பள்ளிகள் இயங்கி வரும் நிலையில், 121 பள்ளிகளின் அங்கீகாரம் புதுப்பிக்கவில்லை. அதேபோல சென்னை மாவட்டத்தில் இயங்கிவரும் 290 பள்ளிகளில் 85 பள்ளிகள் என 11 மாவட்டங்களில் இயங்கும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் 25 சதவீதத்துக்கும் மேல் அங்கீகாரத்தை புதுப்பிக்கவில்லை. மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்ககத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 25 பள்ளிகள் தொடக்க அனுமதி பெறாமல் இருப்பதும் தெரியவந்துள்ளது.


அந்த பள்ளிகள், வரும் கல்வியாண்டுக்குள் அனுமதி பெறாவிட்டால்  மாணவர்களை சேர்க்க தடை விதிக்கவும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்து அவர்களுக்கு உரிய நோட்டீசும் அனுப்பியுள்ளது. அதேபோல, தொடக்க  கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் நர்சரி, பிரைமரி பள்ளிகளில் 390 தனியார் பள்ளிகள் தொடக்க அனுமதி பெறாமல் இயங்கி வருவதும் தெரியவந்துள்ளது. இந்த பள்ளிகளும், வரும் கல்வியாண்டு தொடங்குவதற்குள் அனுமதியை பெற வேண்டும். இல்லை என்றால் அந்த ப ள்ளிகளில் மாணவர்களை சேர்க்க தடை விதிக்கவும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில்தான்  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் மேற்கண்ட பிரச்னைகள் குறித்து தீவிரமாக ஆலோசிக்க உள்ளனர். அதற்கு பிறகு மேற்கண்ட பள்ளிகள் மூடபள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement