ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளரும் முதுபெரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஏவிஎம் சரவணன் வியாழக்கிழமை காலை காலமானார். இவருக்கு வயது 86.
சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோவின் மூன்றாவது தளத்தில் மக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
ஏவி மெய்யப்ப செட்டியார் தொடங்கிய ஏவிஎம் நிறுவனத்தை அவருக்கு பின்னர், சரவணன் திறம்பட நிர்வகித்து வந்தார். நடிகர்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட பல தலைமுறை நடிகர்களின் படங்களைத் தயாரித்துள்ளார்.
நானும் ஒரு பெண், சம்சாரம் அது மின்சாரம், மின்சார கனவு, சிவாஜி, வேட்டைக்காரன், அயன் உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்கள் மற்றும் சின்னத் திரை தொடர்களையும் தயாரித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் கலைமாமணி, புதுச்சேரி அரசின் சிகரம் விருதுகளைப் பெற்றவர் சரவணன். மேலும், சிறந்த திரைப்படங்களை தயாரித்ததற்காக பல விருதுகளை பெற்றுள்ளார்.
வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலப் பிரச்னைகளால் கடந்த சில ஆண்டுகளாக சரவணன் மருத்துவ சிகிச்சையில் இருந்தார். ஏவிஎம் ஸ்டூடியோவில் உள்ள வீட்டில் தங்கியிருந்த சரவணன், இன்று அதிகாலை 5 மணியளவில் காலமானார்.
இன்று பிற்பகல் 3 மணியளவில் ஏவிஎம் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளது.

0 Comments