தமிழகத்தில் மாநில அரசுக்கு இணையாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தனி அரசாங்கத்தை நடத்தி வருவது துரதிருஷ்டவசமானது' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
'கனவு இல்லம்' திட்டத்தின் கீழ், கவிஞர் வைரமுத்துவுக்கு தமிழக அரசு சார்பில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின், அந்த வீடு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.
மேல்முறையீடு இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் அவகாசம் கோரியதை அடுத்து, விசாரணையை பிற்பகல் 2:15 மணிக்கு தள்ளிவைத்தார்.
வைரமுத்து தரப்பில் வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ் ஆஜராகி, ''முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி திலகவதி, எழுத்தாளர் மறைமலை இலக்குவனாருக்கு வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, மாநில அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளது,'' என்றார்.
இதை கேட்ட நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் கூறியதாவது:இது, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் செயல். எழுத்தாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்வது என்பது, ஒரு உணர்வுபூர்வமான விஷயம். இது, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு தெரியாது.
தமிழகத்தில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், மாநில அரசுக்கு இணையாக தனி அரசாங்கத்தை நடத்தி வருகின்றனர். இது, துரதிருஷ்டவசமானது. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், அதிகார தொனியிலேயே செயல்படுவர். முன்னாள் முதல்வர் கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால், இதை ஒருபோதும் அனுமதித்திருக்க மாட்டார். ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை, இணை அரசாங்கம் நடத்த அனுமதித்தால், அது பெரும் சிக்கலை ஏற்படுத்தி விடும். இவ்வாறு நீதிபதி கூறினார்.
அரசை நடத்துவது முதல்வர்' கவிஞர் வைரமுத்து தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன், பிற்பகலில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, ''தமிழகத்தில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அரசாங்கத்தை நடத்தவில்லை; ஸ்டாலின் தான் தமிழக அரசை நடத்தி வருகிறார்,'' என, விளக்கம் அளித்தார். 'இந்த விளக்கம் தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்க போவதில்லை' என்று கூறிய நீதிபதி, கவிஞர் வைரமுத்து மனுவுக்கு நான்கு வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.
தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை
கனவு இல்லம்' திட்டத்தின் கீழ், அண்ணா நகர் மற்றும் செனாய் நகரில், முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி திலகவதி, எழுத்தாளர் மறைமலை இலக்குவனார் ஆகியோருக்கு, 2022ம் ஆண்டில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின், இருவருக்கான வீடு ஒதுக்கீடும், கடந்த ஜனவரியில் ரத்து செய்யப்பட்டது.
இதை எதிர்த்து, இருவரும் தொடர்ந்த வழக்கை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், இருவருக்கும் வீடு ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கை விசாரித்த, நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. மனுவுக்கு திலகவதி, மறைமலை இலக்குவனார் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை செப்., 8ம் தேதிக்கு தள்ளிவைத்தது.
0 Comments