“ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வேலை” – தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் செய்ய ஆந்திரா அரசு முடிவு
முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது.
தேசிய அளவில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் கட்சி ஆளும் ஆந்திராவில் தொழிலாளர்கள் பணி நேரத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஆந்திரா மாநிலத்தின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சர் கே. பார்த்தசாரதி கூறியிருப்பதாவது, “இந்தச் சட்டத்திருத்தத்தின் மூலம், முதலீட்டாளர்களை அதிக அளவில் ஈர்க்க முடியும். அனைத்து மாநிலங்களிலும், உலகமயமாக்கல் நிகழ்ந்துவருகிறது. உலக விதிகளை அமல்படுத்த இந்தத் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
”ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ஒன்பது மணிநேர வேலை நேரத்தை அனுமதிக்கும் தொடர்புடைய சட்டப் பிரிவுகள் இப்போது ஒரு நாளைக்கு 10 மணிநேரமாக உயர்த்தப்பட்டுள்ளன. பிரிவு 55 இன் கீழ் ஐந்து மணி நேர வேலைக்கு ஒரு மணி நேரம் ஓய்வு இருந்தது, இப்போது அது ஆறு மணி நேரமாக மாற்றப்பட்டுள்ளது,” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு அம்மாநில சிபிஐ மாநில செயலாளர் கே. ராமகிருஷ்ணா கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, “பெரிய தொழிலதிபர்களை திருப்திப்படுத்த விதிகளைத் திருத்துமாறு மத்திய அரசின் அழுத்தத்தில் மாநிலம் உள்ளது. இந்தத் திருத்தங்கள் தொழிலாளர்களை அடிமைகளாக்கும்,” எனத் தெரிவித்துள்ளார்.
தனியார் நிறுவனங்களில் பணி நேரத்தை 9 மணிநேரத்திலிருந்து 10 மணி நேரமாக அதிகரிக்க ஆந்திரப் பிரதேச அரசு அனுமதிக்கவுள்ளது. இதன்மூலம் உணவு இடைவேளையுடன் சேர்த்து ஒருநாளைக்கு 12 மணி நேரம் வரை வேலை பார்க்க வேண்டிய சூழல் ஏற்படும் என்று தொழிற்சங்கத்தினர் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும் இடைவேளை இல்லாத தொடர்ச்சியான வேலை நேரம் ஐந்து மணி நேரத்திலிருந்து ஆறு மணி நேரமாக உயர்த்தப்படவுள்ளது. 75 மணி நேரமாக இருந்த ஓவர் டைம் உச்ச வரம்பு 144 மணி நேரமாக உயர்த்தப்படவுள்ளது. பெண்கள் இரவு நேரப் பணிக்கு அனுமதிக்கப்படுவார்கள். இவற்றை நடைமுறைப்படுத்த தொழிற்சாலைகள் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு ஆந்திர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தொழில் நிறுவனங்களுக்கு ஏதுவான சுழலை உருவாக்குவதற்காக இதுபோன்ற சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக அரசு கூறுகிறது.
இதுகுறித்து தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சர் கே.பரதசாரதி, "தொழில் செய்வதை எளிதாக்குதல் (EoDB) கொள்கையின் ஒரு பகுதியாக இந்தப் பிரிவுகளைத் திருத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. விதிகளைத் தளர்த்துவது அதிக முதலீடுகளை ஈர்க்க உதவும்" என தெரிவித்துள்ளார்.
ஆனால் இவை தொழிலாளர்களுக்கு விரோதமானவை என்று தொழிற்சங்கங்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. சிபிஎம் மாநிலச் செயலாளர் வி.ஸ்ரீனிவாச ராவ் இந்த நடவடிக்கையை கண்டித்து, அதை திரும்பப் பெறக் கோரியுள்ளார்.
அவர், "பெரிய தொழிலதிபர்களைத் திருப்திப்படுத்த விதிகளைத் திருத்த மத்திய அரசிடமிருந்து மாநிலம் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த திருத்தங்கள் தொழிலாளர்களை அடிமைகளாக்கும். தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்களை எதிர்த்து ஜூலை 9ஆம் தேதி நாட்டின் ஒட்டுமொத்த தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்திற்கு தயாராகி வரும் நிலையில், ஆந்திர அரசு இந்த துரதிர்ஷ்டவசமான முடிவை எடுத்துள்ளது” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாளடைவில், இது 12 மணி நேரமாக அதிகரித்து விடுமோ என தொழிலாளர்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.
தொழிலாளர்களின் உடல்நலனை பாதிக்கும்: மருத்துவர்
இதேபோல மருத்துவர் டி. செல்வகுமார் என்பவரும் ஆந்திர அரசின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், "பணியாளர்களின் வேலை நேரத்தை அதிகரிப்பது அவர்களது உடல்நலனை பாதிக்கும். மேலும், செயல் திறனும் பாதிப்படையும். நிர்ணயிக்கப்பட்ட 8 மணி நேரத்தைக் கடந்து வேலை செய்யுமாறு மனிதர்களை நிரபந்திப்பது அறிவுபூர்வமான திட்டம் அல்ல" என தெரிவித்தார்.
0 Comments