சிலை கடத்தல் வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு தன்னை வழக்கில் சிக்க வைத்ததாக டிஎஸ்பி தொடர்ந்த வழக்கில், பொன்.மாணிக்கவேலின் பாலவாக்கத்தில் உள்ள வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழக கோயில்களில் இருந்து மாயமான பழமையான சிலைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தமிழ்நாடு அரசு, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவை உருவாக்கியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அந்தப் பிரிவின் ஐஜி.யாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டார். அப்போது சர்வதேசக் கடத்தல் கும்பலோடு கூட்டுச் சேர்ந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சாமி சிலைகளை கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட திருவள்ளூர் டிஎஸ்பியாக இருந்த காதர்பாஷா பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
தன்னை பழிவாங்கும் நோக்கில் தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவுசெய்த சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி காதர் பாஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் முன்னாள் ஐஜி, பொன் மாணிக்கவேல் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து பொன்.மாணிக்கவேல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா முராரி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன்.மாணிக்கவேல் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நாகமுத்து, ‘‘காணாமல்போன, சில சிலைகள் மீட்கப்பட்டன. தற்போதும் அந்த வழக்குகள் நடந்து வருகிறது. ஆனால் தன்மீது குற்றம்சாட்டிய காதர்பாஷா ஒரு போலீஸ் அதிகாரி. அவர்மீது சிலை கடத்தல் தொடர்பாக பல குற்றச்சாட்டுகள் உள்ளன.
சிலை கடத்தல் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட அவர், காழ்ப்புணர்ச்சி காரணமாக தன்மீது அவதூறு பரப்பி இதுபோன்ற தவறான குற்றச்சாட்டை வைத்துள்ளார். அவரது புகாரை கேட்டு உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் முழுமையான விசயங்களை கருத்தில் கொள்ளமால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. எனவே சிபி ஐ விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்” என வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை முழுமையாக ஏற்க மறுத்த நீதிபதிகள், சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டதை எதிர்த்து பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அதைத் தொடர்ந்து, பொன்.மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டு குறித்து சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
இது குறித்து வழக்குப்பதிவும் செய்தனர். சிபிஐ அதிகாரிகள் விசாரணையின் பிடி இறுகுவதால், அதில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள, கோயில், கோயிலாக சென்று தமிழக அரசுக்கு எதிராக பேட்டி கொடுத்து வந்தார். அங்கு சுண்டல் வழங்குவதில் முறைகேடு, ஊழியர்களுக்கு சம்பளம் குறைவு என்றெல்லாம் கூறி வந்தார். ஆனாலும் அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து தொடர்ந்து சிபிஐ விசாரித்து வந்தது.
இந்தநிலையில் பாலவாக்கம் காமராஜர் சாலையில் உள்ள வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். அவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டை பூட்டி விட்டு சோதனை நடைபெறுகிறது. வீட்டிற்குள் யாரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
வீட்டில் இருந்து யாரும் வெளியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அவரது வீட்டில் சிலை கடத்தல் விசாரணை தொடர்பாக சில ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. ஓய்வு பெற்ற போலீஸ் ஐஜி வீட்டில் சிபிஐ சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments