"வாகனங்களில் தேவையற்ற ஸ்டிக்கர்கள் எதையும் ஒட்டக் கூடாது"
மீறினால் மே 2ம் தேதி முதல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - காவல்துறை எச்சரிக்கை
"நம்பர் பிளேட்டுகளில் தேவையற்ற ஸ்டிக்கர் கூடாது"
அரசால் அங்கீகரிக்கப்படாத, பிரஸ், காவல், டாக்டர், வக்கீல், மின்வாரியம் போன்ற ஸ்டிக்கர்கள் தனியார் வாகனங்களில் ஒட்டக்கூடாது என்றும், மீறி வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி இருந்தால் வரும் 2ம் தேதி முதல் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தனியார் வாகனங்களின் வாகன எண் தகட்டில் ஸ்டிக்கர்கள் அல்லது வேறு ஏதேனும் சின்னங்கள், குறிகள் வடிவில் தங்களது துறை அடையாளங்களை வெளிப்படுத்துவது, தனி நபர்களுக்கு மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கும் பரவலான எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தலாம்.
பெரும்பாலும், சென்னை பெருநகரில் உள்ள தனியார் வாகனங்களில் பத்திரிகை, தலைமைச் செயலகம், டிஎன்இபி (மின்வாரியம்), ஜிசிசி (சென்னை மாநகராட்சி), காவல் துறை உள்பட முப்படை போன்ற துறைகள், நிறுவனங்களின் பெயர்களை காணலாம்.
இதுபோன்ற ஸ்டிக்கர்கள் வாகன எண் தகட்டிலும், வேறு பகுதியிலும் காணப்படும். இத்தகைய அரசாங்க தொடர்புடைய சின்னங்கள், எழுத்துகளை தனியார் வாகனங்களில் வெளிப்படுத்துவது அதன் இயக்கம் மற்றும் பாதுகாப்பை சமரசம் செய்கிறது.
கூடுதலாக, குற்றம் சாட்டப்பட்டவர்களும் வாகனத்தில் இத்தகைய ஸ்டிக்கர்களை தவறாக பயன்படுத்தி வருகிறார்கள், இதனால் காவல்துறையின் கடுமையான நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து வருகிறார்கள்.
இதுதவிர, பல தனியார் வாகனங்களில் ஒரு சில அரசியல் கட்சியை சித்தரிக்கும் சின்னங்கள், மருத்துவர் அல்லது வக்கீல் என வெளிப்படுத்துவதும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த உண்மையின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை இந்த நடைமுறைகளுக்கு எதிராக சாலையைப் பயன்படுத்துபவர்களை எச்சரித்தும், முரண்பாட்டினை தங்களது வாகனத்தில் சரிசெய்ய வரும் 1ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது.
மேலும் விதி மீறலில் ஈடுபடுபவர்கள் மீது வரும் 2ம் தேதி முதல், மோட்டார் வாகன சட்டம் 1988-ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் (மோட்டார் வாகனத்தில் அங்கீகரிக்கப்படாத குறியீடு) பிரிவு 198-ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படும் மற்றும் வாகன எண் தகட்டில் ஏதேனும் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை பயன்படுத்தினால் மோட்டார் வாகன விதி 50 u/s 177-ன் கீழ் அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை பெருநகர காவல் எல்லையில் நேற்று முதல் போக்குவரத்து போலீசார் பைக் மற்றும் கார்களில் அசரால் அங்கீகரிக்கப்படாத பிரஸ், காவல், டாக்டர், வக்கீல், சென்னை மாநகராட்சி, மின்வாரியம் போன்ற அரசு துறை சார்ந்த ஸ்டிக்கர்கள் ஒட்ட கூடாது என்று எச்சரிக்கை விடுத்தனர். மேலும், தனியார் வாகனங்களில் ஒட்டப்பட்டிருந்த டாக்டர், வக்கீல், பிரஸ், காவல் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை கிழித்தனர்.
அப்போது வாகன ஓட்டிகளிடம் வரும் 2ம் தேதி முதல் இதுபோன்ற ஸ்டிக்கர்கள் வாகனங்களில் ஒட்டி இருந்ததால், சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் படி ரூ.500 அபராதம் விதிதக்கப்படும்.
முதல் முறை எச்சரிக்கையை மீறி வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை வாகன ஓட்டிகள் அகற்றவில்லை என்றால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
0 Comments