புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் காவல்துறையினர் எதிர்மறை அணுகுமுறையை கைவிடுத்து நேர்மறையான அணுகுமுறையுடன் பழக வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அனைத்து காவல்துறையினருக்கும் அவர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: பொதுமக்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு காவல் நிலையங்களில் தீர்வு கிடைக்காத பட்சத்தில், அதை உயர் அதிகாரிகளிடம் கொண்டு செல்லும்போது, சம்மந்தப்பட்ட காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.
மேலும், சில காவல் துறையினர் அதிகார உச்சத்தில் தாங்களே இருப்பதாகவும், தாங்கள் யாருக்கும் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை எனவும் கருதுகின்றனர். இந்த எதிர்மறையான அணுகுமுறை காரணமாக சில காவல்துறையினர், புகார் அளிக்க வரும் பொதுமக்களை நேரடியாகவே வசைபாடும் சூழ்நிலையும் நிலவி வருகிறது. இது பொதுமக்கள் மனதில் காவல்துறை மீதான நம்பிக்கையை குறைக்கும். எந்தவொரு துறையிலும் சரியான அணுகுமுறை இருந்தால் மட்டுமே ஒரு அதிகாரியால் தங்கள் இலக்குகளை தொழிலிலும், வாழ்க்கையிலும் அடைய முடியும். எந்தவொரு பதவியும் அதிகாரத்திற்கானதல்ல. மக்களுக்கான சேவையாற்றவே அந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு காவல்துறையினரும் இறுதி அதிகாரம் படைத்தவர் இல்லை என்பதை உணர்ந்து, தவறு செய்தால் கேள்வி கேட்க தங்களுக்கு மேல், உயர் அதிகாரிகள், நீதிமன்றம், ஆணையம் போன்றவைகள் உள்ளதை அறிந்து நடக்க வேண்டும். காவல்துறையினர் இதுபோன்ற எதிர்மறை அணுகுமுறைகளை கைவிட்டு, அதற்கு பதிலாக பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு செவிசாய்த்து தங்களால் முடிந்தவரை தீர்வு காண முயற்சிப்பதும், தங்கள் செயல்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகளிடம் விளக்குவதும் போன்ற நேர்மறை மனப்பாண்மையை வளர்த்தெடுக்க வேண்டும். உயர் அதிகாரிகளும் தங்கள் கீழ் பணியாற்றும் காவல் துறையினருக்கு நேர்மறை அணுகுமுறை குறித்த பயிற்சிகளை தொடர்ந்து வழங்க வேண்டும். இனிவரும் காலங்களில் அனைத்து காவல்துறையினரும் புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் எதிர்மறை அணுகுமுறையை கைவிடுத்து நேர்மறையான அணுகுமுறையுடன் பழகுவதை வாடிக்கையாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments