கட்டணமில்லாமல் வழங்கப்படும் 100 யூனிட் மின்சாரத்தை வேண்டாம் என நினைப்பவர்கள் கணக்கீட்டாளர் அளிக்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கலாம் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த பேட்டி:
100 யூனிட் மின்சாரம் இலவசமாகவும், 100 யூனிட்க்கு மேல் 200 யூனிட்டுக்குள் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு மானியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு அரசிற்கு ரூ.3,496 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படுகிறது. மேலும், 100 யூனிட் மின்சாரம் கட்டணமில்லாமல் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதை வேண்டாம் என்று வீட்டினர் விரும்பினால், கணக்கீட்டாளர்கள் அளிக்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கலாம் எனவும் தெரிவித்தார்.
புதைவட கம்பிகள் அமைக்கும் பணி ரூ.1,200 கோடியில் நடைப்பெற்று வருகிறது. பருவ மழைக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதோடு, தடையில்லா மின்சாரம் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வீடுகளில் மின் கணக்கிடுவதை எளிமையாக்கும் வகையில், ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கு மீட்டர்கள் கொள்முதல் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
விரைவில் டெண்டர் கோரப்பட்டு இறுதிசெய்தப்பின், வீடுகள் தோறும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டு, மாதம்தோறும் மின் கணக்கீடு செய்யும் பணி தொடங்கப்படும். நிலக்கரி தற்போது 143 டாலருக்கு கொள்முதல் செய்யப்பட்டு வரும் நிலையில், அதனை உயர்த்தி 203 டாலருக்கு கொள்முதல் செய்ய மத்திய அரசு தமிழக அரசிற்கு கடிதம் அனுப்பியுள்ளது. குறைந்தபட்சம் 10% நிலக்கரியை மத்திய அரசிடம் இருந்து கட்டாயம் கொள்முதல் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
0 Comments